Skip to main content

ஆய்வுக்கு வந்த ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
rayilway

 

பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே அதிகாரிகளை காவல்துறையினர் வந்து மீட்டதால் பரபரப்பு நிலவியது.

 

காரைக்குடி- திருவாரூர் அகல இரயில்பாதை பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.

 

தற்போது பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆளில்லா ரயில்கேட்டை நிரந்தரமாக தடுப்பு அமைத்து மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை மூடினால் இவ்வழியே அமைந்துள்ள குடியிருப்புகள், மருத்துவமனை, அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும்.

 

மேலும் இவ்வழியே 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் கூறி, இந்த ரயில்வே கேட்டை (எண்- எல்.சி.21) மூடக்கூடாது என குழு அமைத்து போராடி வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல் கட்சியினர், ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ரயில்வே கேட்டை மூடும் முடிவை கைவிட வலியுறுத்தி வரும் பிப் 28 ஆம் தேதி பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் சாலை மறியலும், தொடர்ந்து ரயிலை இயக்கினால் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக போராட்டக்குழு தலைவர் வழக்கறிஞர் எஸ்.மோகன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ரயில்வே உயரதிகாரிகள் புதன்கிழமை மாலை 7 மணி வாக்கில்  குடை வண்டியில் (டிராலி) அமர்ந்து ரயில்பாதை ஆய்வில் ஈடுபட்டனர். இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் டிராலியை மறித்து, தடுத்து நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு, ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், ரயில்வே உயர் அலுவலர்களை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து சென்றனர்.

 

பின்னர் வட்டாட்சியர் முன்னிலையில் ரயில்வே அதிகாரிகள் ரவிக்குமார், மனோகர், ஜான் பிரிட்டோ, ரயில்வே ஒப்பந்ததாரர் பிரசாத் ரெட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், கணேசன் சங்கரன், பழனிவேலு சங்கரன், முகமது யாசின், எஸ்.சத்தியமூர்த்தி,  ராஜா, செந்தில்குமார், தங்கவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

முடிவில் இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், மற்ற விசயங்கள் குறித்து வரும் பிப் 24 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தையில் பேசி முடிவு செய்யலாம் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தெரிவித்தையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.