Skip to main content

மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு... கண்கலங்கிய சபாநாயகர் அப்பாவு!

Published on 05/06/2022 | Edited on 06/06/2022

 

 

childrens incident police investigation in nellai district

நெல்லை மாவட்டத்தின் பணகுடி அருகேயுள்ள லெப்பைக்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு நித்திஷ் (வயது 7), நிதிஷா (வயது 5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும், அதே பகுதியைச் சேர்ந்த சுதன், தபிஷா தம்பதியரின் குழந்தையான கபிசந்த் (வயது 4) ஆகிய மூவரும் நேற்று (04/06/2022) மதியம் 02.00 மணியளவில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜின் அண்ணனான மணிகண்டனின் காரைத் திறந்து உள்ளே சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

காரினுள்ளே வெகுநேரம் விளையாடிய அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் வெளியேற நினைத்து கதவைத் திறக்க முயன்ற குழந்தைகளுக்குத் தெரியவில்லை. காற்றுப் புகாத காருக்குள் மூச்சுத்திணறிய மூன்று குழந்தைகளும் காரிலேயே மயங்கிச் சரிந்திருக்கின்றனர்.

 

இந்தச் சூழலில் வெகுநேரமாகியும் விளையாடச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காமல் போகவே, தற்செயலாக அந்தப்பக்கம் நின்றிருந்த காரைப் பார்த்தவர்கள் அதனுள் மூன்று குழந்தைகளும் மயங்கிக் கிடந்தது கண்டு பதறியவர்கள் மூவரையும் உடனடியாக மீட்டு பணக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

 

அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கேட்டுக் கதறிய பெற்றோர்களின் துக்கம் நெஞ்சைக் கனக்க வைத்தது. இதுகுறித்த தகவலறிந்த பணக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

childrens incident police investigation in nellai district


ஏற்கனவே கடுமையான வெயில். பூட்டப்பட்ட காரினுள்ளே கடுமையான வெப்பத்தாலும், காற்று புகாத போதிலும், வெப்பத்தில் குழந்தைகளின் பிஞ்சு மேனி வெந்திருந்ததாகச் சொன்னார் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியான அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.

 

தகவலறிந்து பணக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த சபாநாயகர் அப்பாவு வாடிப் போய் இறந்த மூன்று பிஞ்சுகளையும் கண்டதும் கண்கலங்கிவிட்டார். அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன சபாநாயகர் அப்பாவு சோகம் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை எஸ்.பி.சரவணன் பிள்ளைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தினார். பிஞ்சு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருத்தல் கூடாது. எச்சரிக்கை... எச்சரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.