Skip to main content

பெற்ற குழந்தைகளை பாறை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை; தந்தைக்கு ஆயுள் தண்டனை

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

 

childrens incident father namakkal district mahila court judgement

 

நாமக்கல் அருகே, குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு உட்பட்ட குண்டூர் நாடு அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருடைய மனைவி பாக்கியம் (வயது 26). இவர்களுக்கு 8 வயதில் கிரிதாஸ் என்ற ஆண் குழந்தையும், 6 வயதில் கவிதர்ஷினி என்ற பெண் குழந்தையும் இருந்தனர். 

 

இவர்கள் இருவரும் கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு, தெம்பலம் அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த 2019- ஆம் ஆண்டு நவ. 7- ஆம் தேதி இரு குழந்தைகளும் திடீரென்று மாயமாகினர். 

 

இதுகுறித்து வாழவந்திநாடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அதே ஆண்டு நவ. 11- ஆம் தேதி, தன் இரு குழந்தைகளையும் சீக்குப்பாறை காட்சி முனையில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்து விட்டதாகக்கூறி, சிரஞ்சீவி என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். 

 

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர். சிரஞ்சீவி அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ''எனக்கு, அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நானும் எனது மனைவியும் கர்நாடகா மாநிலத்திற்கு ஒரு எஸ்டேட்டில் மிளகு பறிக்கும் வேலைக்குச் சென்று விட்டோம். அதனால் என் மகனையும், மகளையும் தேர்புளியமரம் பகுதியில் வசித்து வரும் என் பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டேன். 

 

பிறகு தீபாவளி நேரத்தில் நாங்கள் சொந்த ஊர் திரும்பினோம். அதன்பிறகு, நான் மனைவி, குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் ஒன்றாக குடியேறிவிட்டோம். குழந்தைகளையும் அங்கிருந்தே தெம்பலம் அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். 

 

இந்நிலையில், மாமனார் வீட்டில் இருக்கப் பிடிக்காததால் தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரசம்பட்டியில் உள்ள என் வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று இரவு என் மாமனாரும், மாமியாரும் என் வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். 

 

பலமுறை அழைத்தும் என் மனைவி என்னுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என் மனைவி மீது கோபம் அதிகமானது. இந்நிலையில் 7.11.2019ம் தேதி, என் குழந்தைகள் படித்து வரும் தெம்பலம் பள்ளிக்குச் சென்றேன். பள்ளி முடிந்து வெளியே வந்த என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு என் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டேன். அதற்கு அடுத்த நாள் குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். 

 

இதையடுத்து 11.11.20219ம் தேதி, கொல்லிமலை சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றேன். அப்போது என் குழந்தைகள், அப்பா இனிமேல் அம்மா நம் வீட்டிற்கு வர மாட்டாங்களா? என்று அழுதார்கள். நான் அவர்களுக்காக எவ்வளவோ செய்தாலும், என் பேச்சைக் கேட்காமல் அம்மாவைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். என் மீது பாசம் இல்லாத குழந்தைகளைப் பார்த்து எனக்கு வெறுப்பாக இருந்தது. 

 

அதனால் ஆத்திரம் அடைந்த நான் என் மகளையும், மகனையும் காட்சி முனை பகுதியில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்து விட்டேன். என் குழந்தைகளையே கொன்று விட்டதால், இனியும் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மட்டும் எதற்கு வீட்டில் இருக்க வேண்டும் எனக்கருதி, 12.11.2019ம் தேதி, அவற்றையும் எடுத்துச்சென்று சவுக்குத் தோப்பில் உள்ள மரக்கழிவுகள் கொட்டும் குழியில் போட்டுவிட்டேன்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

 

இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில், நீதிபதி நந்தினி முன்னிலையில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் விஜயபாரதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை (செப். 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

 

அதன்படி, இரு குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்திற்காக சிரஞ்சீவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.  

 

 

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.