செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாளின் பெற்றோர் எஸ். சீதாராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் இன்று (03/12/2021) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தனது மகள் துணி வெளுப்பதற்கு உபயோகிக்கும் இரசாயன (பிளீச்சிங் பவுடர்) திரவத்தைத் தவறுதலாகக் குடித்ததால், உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெரிய, அரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது உடல் நலம் தேறிவருவதற்கு நன்றி தெரிவித்தார்கள்.
இச்சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர், சிறுமி இசக்கியம்மாளின் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.