Skip to main content

ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது கரோனா - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Chief MK Stalin's press meet in mettur

 

இன்று (12.06.2021) காலை 11.33 மணி அளவில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்காக மலர்தூவி திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிமுதல் 10 ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டது. 

 

மேட்டூர் அணையைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ''மேட்டூர் அணை நீர் மூலம் சுமார் 5.2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நான் முன்வைத்த 7 அம்ச திட்டங்களில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்திருந்தேன். காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம். கடைமடைவரை நீர் செல்வதை உறுதிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன விவசாய இடுபொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறந்துவைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

 

தமிழகத்தில் கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை இருந்த நிலையில், தற்போது அவை எல்லாம் இல்லாமல் பிரச்சினை இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் கெஞ்சி கூட கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.