Skip to main content

முதலமைச்சர் தூத்துக்குடி விசிட்! மக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி..!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை முன்பைக் காட்டிலும் தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கியதில், மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திவருகிறார்.

 

கடற்கரை நகரமான தூத்துக்குடியும் வெள்ளத்திற்குத் தப்பவில்லை. நகரின் ரஹ்ம்த் நகர் நீதிமன்றம், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. ஏற்கனவே இங்கு ஆய்வுசெய்த தொகுதி எம்.பி.யான கனிமொழியும் வெள்ள நிவாரணப் பணிகளை அதிகாரிகளைக் கொண்டு விரைவுபடுத்தினார். இந்த நிலையில் தூத்துக்குடியின் வெள்ளப் பகுதி பாதிப்புகளை ஆய்வு செய்யவும் மக்களைச் சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று (02.12.2021) மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அவருடன் எம்.பி. கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, தொகுதி எம்.எல்.ஏ.வும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், அமைச்சர் நேரு மற்றும் மார்க்கண்டேயன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.

 

நகரின் பிரையண்ட் நகரில் பாதிக்கப்பட்ட 1, 2ஆம் தெருக்களில் நடந்து சென்று ஆய்வுசெய்த முதல்வரிடம் அந்தப் பகுதி மக்கள் மழையின் பொருட்டு தங்களின் இன்னல்களைத் தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்வதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் அப்பகுதி நிலைமைகளை கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டறிந்த முதல்வர், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின் மாநகராட்சியில் கமிஷ்னர் சாருஸ்ரீ, வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான சி.ஜி. தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைள் பற்றி ஆலோசனை செய்த முதல்வர், தொடர்ந்து உரிய நடிவக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

ரஹ்மத் நகர், அதன் பின் வெகுவாகப் பாதிக்கப்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியின் வெள்ளப் பாதிப்புகளை நடந்து சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினிடம் அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, ‘கடந்த பல ஆண்டுகளாகப் பெய்த, ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இந்தக் காலனியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் வெள்ளக்காடாகிவிடுகிறது. நாங்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு வெளியே வரமுடியாத நிலைதான் ஏற்படுகிறது’ என்று முதல்வரிடம் தெரிவித்து மக்கள் அளித்த கோரிக்கையைப் பெற்ற முதல்வர், இனி அப்படி நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து எட்டயபுரம் சாலையில் உள்ள மண்டபத்திற்குச் சென்ற முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பாய், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அனைத்து துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், நகரின் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.