![Chief Minister personally paid tribute to Vetri Duraisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/P2-pkX8ba43XuR1BMXvG_-5jWKLu0HWnARr5Gorzd64/1707833082/sites/default/files/inline-images/a4880.jpg)
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (12.02.2024) மீட்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து இன்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வைகோ, அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், வி.கே. சசிகலா, கே. பாலகிருஷ்ணன், சீமான், அன்புமணி ராமதாஸ், முத்தரசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.