Skip to main content

கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Chief Minister M.K.Stalin visited the kalaignar kottam

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் கோட்டத்தை பார்வையிட்ட பின் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு;  திமுக தொண்டர்களுக்கு முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Mikjam storm damage; Chief Minister's important order to DMK workers

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. 

 

அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, “மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும். தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்” என்றும் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அம்முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப்பணி ஆற்றுவதற்காக வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இக்கட்டான இச்சூழ்நிலையில் பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

 

அதன் பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

 

Mikjam storm damage; Chief Minister's important order to DMK workers

 

இந்நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும்  மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் திமுகவினருடன், இன்னும் பல தொண்டர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் விரைந்து வாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'மிக்ஜாம்' புயல்; அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

'Miqjam' Storm; Principal inspection at State Emergency Operations Center

 

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு இன்று (03.12.2023) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 இதர நிவாரண மையங்களில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்களைக் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புயலின் போது மரங்கள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் கீழே விழும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  எனப் பலரும் உடனிருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்