Skip to main content

அரசு பங்களாவுக்கு மாறுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! 

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Chief Minister MK Stalin shifts to government bungalow!

 

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள சித்தரஞ்சன் சாலை பங்களாவில் வசித்துவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! அங்கிருந்து அரசு பங்களாவுக்கு அவர் இடமாறவிருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம்!

 

சென்னை பசுமைவழிச் சாலை பகுதிகளில் தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள் இருக்கின்றன. இந்த அரசு பங்களாக்களில்தான் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக  இருந்த ஓ. பன்னீர்செல்வமும் வசித்தனர். கலைஞர், ஜெயலலிதா இருவரும் முதல்வராக இருந்தபோது, அவரவர்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சியை நடத்திவந்தனர். அரசு பங்களாக்களில் இவர்கள் குடியேறவில்லை. அவர்களின் பங்களாக்களே முதல்வரின் கேம்ப் அலுவலகமாகவும் இயங்கி வந்திருக்கின்றன.

 

இந்த நிலையில், சித்தரஞ்சன் சாலை பங்களாவிலிருந்து அரசு பங்களாவுக்கு இடமாறலாமா? என்று ஆலோசித்துவருகிறார் மு.க. ஸ்டாலின். இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டை அதிகாரிகள், ’’ஒருநாளைக்கு சராசரியாக 20 மணி நேரம் உழைத்துவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்களுடன் ஆலோசனை, உயரதிகாரிகளுடன் ஆலோசனை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை என்று ஏகப்பட்ட ஆலோசனைகள் நடத்திவருகிறார். இத்தகைய ஆலோசனைகளுக்காக அரசு பங்களாவில் குடியேறத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். அரசின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், அமைச்சர்களை அவசர ஆலோசனைகளுக்காக அழைத்து விவாதிக்கவும் என பல்வேறு சூழல்களுக்கு அரசு பங்களாதான் வசதியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். அதனால் விரைவில் அரசு பங்களாவுக்கு மாறுகிறார். 

 

கலைஞர் தலைமையிலான 2006 - 2011 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அதே குறிஞ்சி இல்லத்தில் தங்கி அரசு பணிகளைக் கவனிக்கத் திட்டமிடுகிறார் ஸ்டாலின்.

 

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், இந்தக் குறிஞ்சி இல்லம், சபாநாயகராக இருந்த தனபாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதுவரை அந்த இல்லத்தில்தான் இருக்கிறார் தனபால். அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பங்களா காலியானதும் அதனைப் புனரமைக்கும் பணிகளைப் பொதுப்பணித்துறையினர் கவனிக்கவிருக்கிறார்கள்‘’ என்கின்றனர் அதிகாரிகள்.

 

குறிஞ்சி இல்லம் முதல்வரின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டப் பிறகு, அந்த இல்லத்திற்கு முதல்வர் இடம் மாறுவார். இந்த அரசு பங்களா, முதல்வரின் முகாம் அலுவலகமாக மட்டுமே செயல்படும் என்று சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.