
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வர் என்பவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய மனைவி நயன்தாராவை தொலைப்பேசியில் அழைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்ததோடு மருத்துவர் பரமேஸ்வர் உடல்நலம் தேற தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.