சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்த கனமழையால் பொங்கலுக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த அனைத்து நெற்கதிர்களும் தண்ணீரில் மூழ்கிச் சாய்ந்தது.
தொடர்ந்து தண்ணீரில் நெற்கதிர்கள் நின்றதால் நெல் வயல்களில் மீண்டும் நெற்கதிர்கள் முளைத்துள்ளன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன் சிதம்பரம் புறவழிச்சாலையில் மழையால் முளைத்து சேதமான நெற்பயிருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மறு கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷத்தை முன் வைத்தனர். சிதம்பரம் முன்னாள் நகர்மன்ற மூத்த உறுப்பினர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தியாகராஜன், ஆகியோரின் தலைமையில் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் சார் ஆட்சியர், வட்டாட்சியர், விவசாயத் துறை அதிகாரிகள் சரியான பதில் கூறினால் மட்டுமே இடத்தை விட்டு நகர்வது என குழந்தைகளுடன் அனைத்து விவசாயிகளும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.