Skip to main content

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Chidambaram Venus High School Science Fair

 

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ். குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர்கள் பார்த்தசாரதி, கண்ணப்பன், துணை பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் கணினி, அறிவியல், பொறியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வுக் குழுவினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அறிவியல்  கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள்.

 

இதில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், விக்ரம் சாராபாய் ஆகியோர்களின் வேடமணிந்து மாணவர்கள் அஸ்வின், ஆசிப் அலி, மகேஸ்வரன், தீபக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை சிறப்பு விருந்தினர்களுக்கு காண்பிக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட மேஜைகளில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதனைத் தேர்வுக் குழுவினர் மதிப்பீடு செய்து மாணவர்களின் படைப்புகளுக்கு ஏற்றவாறு மதிப்பீடுகளை வழங்கினர். கண்காட்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டினர். அறிவியல் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.