Skip to main content

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு..! 

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Chidambaram Raja Muthiah Medical College doctors boycott work

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்குப் பயிற்சி உதவித்தொகையினை நெடுங்காலமாக வழங்காமல், பயிற்சி மருத்துவர்களைக் கல்லூரி நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்களிடம் கேட்டபோது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்ற பின்னரும் அரசுக் கல்லூரிகளில் வழங்கும் உதவித்தொகை (Stipend) 21,200 ரூபாய்/மாதம் வழங்காமல், 3000 ரூபாய்/மாதம் என நிர்ணயம் செய்து, அந்த சொற்ப தொகையினை கூட அளிக்காமல் பயிற்சி மருத்துவர்களைப் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கரோனா சூழ்நிலையில் குறைந்த அளவு பயிற்சி மருத்துவர்களை வைத்து சம்பளம் வழங்காமல் அடிமை போல நடத்துவதைக் கண்டிக்கிறோம்.

 

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கும் இந்த நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க பயிற்சி மருத்துவர்களுக்கு N95 Mask, 3Layer Mask போன்ற எந்த முகக்கவசமும் அளிக்காமல் அநீதி இழைக்கிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்படும் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவும், தனிமைப்படுத்திகொள்வதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளும் கூட செய்து தர மறுத்து தண்டித்து வருகிறது. அரசுக் கல்லூரியாக அறிவித்த பின்னரும் அரசுக் கல்லூரி போல் செயல்படாமல், எங்களிடம் பல மடங்கு அதிகமாக கல்விக் கட்டணத்தையும் வசூலித்துக்கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்குப் பெரும் துயரை அளிப்பதைக் கண்டித்து 6ஆம் தேதி முதல் பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம். அரசு உடனடியாக இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்களுக்கு மற்ற கல்லூரிகளுக்கு நிகரான பயிற்சி ஊக்கத்தொகையை (Stipend)  அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தனர்.

 

மேலும், நிலுவையில் உள்ள தொகையினை தாமதிக்காமல் உடனே தர அறிவுறுத்துமாறும், முகக்கவசம், Quarantine போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் அரசு இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு கூறுகின்றனர். சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 350 பேருக்கு மேற்பட்ட நோயாளிகள் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது இவர்களுக்குப் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், பயிற்சி மருத்துவர்களும் மருத்துவமனைக்குச் செல்லவில்லை என்றால் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிர் கேள்விக்குறியே? எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.