Skip to main content

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

chidambaram natarajar temple aruthra tharisana festival 

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில், ஸ்ரீ சிவகாமசுந்தரி நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் பஞ்சமூர்த்திகள் கிழக்கு சன்னதி வழியாக, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மீண்டும் கிழக்கு சன்னதி வழியாக கோவிலுக்குள் வந்து ஆயிரம் கால் மண்டபம் முன்பு நின்று தரிசன காட்சி நடைபெற்றது.

 

இதனையடுத்து கோவில் ராஜ சபையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தேவாரம், திருவெம்பாவை, பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி சபைக்கு புறப்பட்டனர். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நடன பந்தலுக்குள் மூலவர் ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் திரளாக திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா, என்றும் ஹர ஹர கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். இந்த தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் அதிகமாக காணப்பட்டது. மேலவீதி கோபுர வழியிலும், சிவகங்கை குளம் அருகிலும் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அருகிலும், கீழ சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் முன்பும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து மாலை ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோயில் உள் பிரகாரத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கருவறையில் வைத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர், பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளி மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள், வெளிநாட்டு  பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.

 

மேலும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்தும் வகையில் பாதுகாப்போடு தரிசனத்தை கண்டு சொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மேற்பார்வையில், சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சேற்றில் குளித்து சிலம்பம் சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்.. வியக்க வைக்கும் திருவிழா!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.

பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.