Skip to main content

மதங்களைக் கடந்த மாசிமகத் திருவிழா; சிதம்பரத்தில் கோலாகலம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

chidambaram killai village maasimagam festival celebration with integrity

 

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில், நேற்று கிள்ளையில் மாசிமக விழா நடைபெற்றது.

 

கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமி சிலைகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசிமகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர். ஆண்டுதோறும் கிள்ளை மாசிமகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதேபோல் செவ்வாயன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கடற்கரைக்கு வழக்கம்போல தீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால் பகுதியில் தர்கா டிரஸ்ட்  நிர்வாகி சையது சக்காப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியப் பிரமுகர்கள் வரவேற்பளித்து பட்டு சாத்தினார்கள்.

 

பின்னர் பூவராக சாமி எடுத்து வந்த பிரசாதத்தை அதே பகுதியில் இருந்த தர்காவிற்கு அனைவரும் சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. அனைவருக்கும் பிரசாதமாக எடுத்து வரப்பட்ட சர்க்கரை வழங்கப்பட்டது. தர்காவில் பாத்தியா ஓதிய பொருட்கள் ஸ்ரீமுஷ்ணம் சாமி கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் செல்வமணி, சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் ராஜ்குமார், விவசாய சங்க தலைவர்கள் ரங்கநாயகி, கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

கிள்ளை தர்கா டிரஸ்டி நிர்வாகி சையது சக்காப் கூறுகையில், இந்த நிகழ்வு எங்களது முன்னோர்களால் கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாங்களும் செய்து வருகிறோம். பூவராக சாமி வரும்போது மேளதாளங்களுடன் வரவேற்று அவர்கள் எடுத்து வரும் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அதனை தர்காவில் வைத்து பாத்தியா ஓதி இந்த நாட்டில் அனைவரும் சுபிட்சமாக இருக்கும் வகையில் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு அதனை மீண்டும் சாமியிடம் வழங்குவோம் அதனைப் பெற்றுக்கொண்டு சாமி கடற்கரைக்கு செல்வார். கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், "இது நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் மதம் கடந்த மாசிமகமாக கிள்ளையில் நடைபெற்று வருகிறது. இதனை கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரவேற்று வழி அனுப்பி வைப்பதில்  பெருமை கொள்கிறோம்" எனக் கூறுகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.