ஆதிதிராவிடர் நலத்துறையைப் பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 76 இனங்கள் பட்டியல் இனத்தவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,‘பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆதி திராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்றாகும்.’என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வேறொரு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் முடிவு என்ன என்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெற மனுதாரருக்கு அறிவுறுத்திய அமர்வு, விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.