![Change in traffic in Chennai; Ban on heavy vehicles](http://image.nakkheeran.in/cdn/farfuture/lUNX4sg1H_UNaNLFQsHmBNm9hKqroeN-hbMiAKkV1mk/1675392022/sites/default/files/inline-images/786_4.jpg)
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் ஆற்காடு சாலையில் இன்று முதல் பிப்.11 வரை சோதனை முறையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆற்காடு சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்லத் தடை எனவும் அந்த வாகனங்கள் துரைசாமி சாலை, சன்னதி சாலை, 2 ஆவது அவென்யூ வழியாகச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துரைசாமி சாலையிலிருந்து சன்னதி தெரு வழியாகச் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை என நெரிசல் மிகுந்த நேரங்களில் செல்லத் தடை செய்யப்படுகிறது.
சைதாப்பேட்டை சாலையிலிருந்து முத்தாலம்மன் சாலை செல்லும் வாகனங்கள் இந்த புதிய உத்தரவினால் தடை செய்யப்படுகிறது என்றும் இந்த வாகனங்கள் 100 அடி இணைப்பு சாலையிலிருந்து முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாகச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.