வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 6 மாவட்டங்களில் இன்று (15.10.2021) கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மே மாத்தூரில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழையும், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.