Skip to main content

“இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடு கட்ட நடவடிக்கை” -  நகர மன்றத் தலைவர்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Chairman city council meeting construction new houses demolished houses Chidambaram

 

சிதம்பரம் நகர மன்றக் கூட்டம் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு நகரில் உள்ள 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்துப் பேசினர். அப்போது மூத்த உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், “நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல், தற்போது கெடுபிடியாக வரி வசூலிக்கப்படுகிறது. எனவே காலக்கெடு வழங்கி வசூலிக்க வேண்டும். பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” என்றார். 

 

உறுப்பினர் அப்பு சந்திரசேகரன் பேசுகையில், “ஒலிபெருக்கி மூலம் பொது வெளியில் கெடுபிடியாக வரி வசூலிப்பதால் மக்கள் மிகவும் வேதனை அடைகிறார்கள். இதற்கு அவர்கள் எங்களிடம் கேட்கும்போது ஏன் நகரமன்ற உறுப்பினரானோம் என்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார்.

 

வெங்கடேசன் பேசுகையில், “நகரில் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இதற்கு ஆணையர் அஜிதா பர்வீன் தெரிவிக்கையில் “வனத்துறையினர் மூலம் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உறுப்பினர் தில்லை மக்கீன் பேசுகையில், “நகரில் உள்ள மணிக்கூண்டு கடிகாரங்களைச் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் திரியும் பன்றி, நாய்களைப் பிடிக்க வேண்டும்” என்றார். நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் பேசுகையில், “33வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மழைக் காலங்களில் மார்பளவு தண்ணீர் வருகிறது. எனவே அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலின் கரைகளை நிரந்தரமாக உயர்த்தினால் அப்பகுதியில் மழை நீர் உள்ளே வராது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசினார். அதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் சி.க.ராஜன், ஏஆர்சி.மணிகண்டன், தஸ்லிமா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

 

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து நகர மன்றத் தலைவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக வரி வசூலிக்காமல், தற்போது அதிகாரிகள் கெடுபிடியாக மொத்தமாக வரி வசூல் செய்வது கண்டனத்திற்குரியது. மேலும் இது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனவே நகரமன்ற உறுப்பினர்கள் மூலம் சென்று கால அவகாசம் கொடுத்து வரியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகரில் 10 தினங்களில் பன்றி, நாய் மற்றும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு  சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் புதிதாய் குழாய்கள் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் ரூ.8 கோடி செலவில் சீரமைக்கப்படும். உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதற்கான நிதியைப் பெற்று செய்து கொடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.