Skip to main content

விலாசம் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Chain stolen from woman in Coimbatore

 

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவரது கணவர் ஆனந்தவேல். இவர்கள் கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு தங்களது டூவீலரில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அந்த சமயம், குஷ்பூ அணிந்திருந்த தாலி சங்கிலியை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

 

ஆனால், அதற்குள் ஆனந்தவேல் - குஷ்பூ தம்பதி தங்களது இல்லத்தை அடைந்துவிட்டனர். இதையடுத்து, ஆனந்தவேலின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்கும் நேரத்தில் மற்றொருவர் அங்கிருந்த குஷ்பூவிடம் சென்று விலாசம் கேட்பதுபோல் நைஸாக பேசியுள்ளார். அதற்கு குஷ்பூ பதிலளிக்க துவங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த நாலரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஒரு கணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பூ, சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதற்கிடையில், பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பதும் கூலித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், டூவீலரில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கோவையில் உள்ள முக்கியப் பகுதியில் நடக்கும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களால் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.