Skip to main content

விவசாயிகளின் போராட்டம்; மத்திய அரசின் பேச்சுவார்த்தை ரத்து!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
central govt negotiations were cancelled due farmers struggle Mullaperiyar dam issuea

கேரள அரசை கண்டித்து, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் 58 ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கங்கள் உள்பட சில சங்கங்கள், அமைப்புகள்  சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்தமிழக மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 17,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

152 அடி உயரம் கொண்ட அணையைக் கேரளா, 1979 இல் பலவீனமடைந்துவிட்டது எனக் கூறி நீர்மட்டத்தை, 136 அடியாக நிலை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2014இல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக்கி கொள்ளலாம்  எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பேபி அணையை பலப்படத்துவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து, 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து ஒவ்வெரு முறையும் அணை 142 அடியாக உயரும்போதும், புதிய அணை என்ற கோரிக்கையை முன் வைத்து கேரளா பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அணைக்கு 360 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கும், புதிய அணை கட்டிய பின் முல்லைப்பெரியாறு அணையை இடிப்பதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கேரளா மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளன. பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் பொன்காட்சிகண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், செயலர் தலைவர் சலேத்து தலைமையில் நேற்று கேரள அரசைக் கண்டித்து லோயர் கேம்ப் பஸ்ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

central govt negotiations were cancelled due farmers struggle Mullaperiyar dam issuea

மலைப்பாதையில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே இன்ஸபெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், 58ஆம் கால்வாய் விவசாய சங்கம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாரதிய கிசான் சங்கம், முல்லை சாரல் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, “கடந்த 2014இல் கூறப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கேரளா கட்டக் கூடாது என உத்தரவிட்ட பிறகும், கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியது தவறு. கேரளா புதிய அணை கட்டுவதாக கூறப்படும் இடம் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் இருப்பதால் தேசிய புலிகள் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவின் மனுவை பரிசீலிக்ககூடாது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவின் எந்த மனுவையும் பரிசீலிக்க கூடாது.

central govt negotiations were cancelled due farmers struggle Mullaperiyar dam issuea

கடந்த 2014இல் அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்புக்குப் பின், அணை தொடர்பாக கேரளாவில் இருக்கும் தனி நபர்களோ, கேரள மாநில அரசோ போடக்கூடிய எந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் இனி வரும் காலங்களில் அனுமதிக்க கூடாது என்று கூறினார். இந்த நிலையில் தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்ட ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பான டெல்லியில் இன்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் நேற்று தமிழக விவசாயிகள் லோயர் கேம்பில் மிக பிரமாண்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியாக்களுடன் கேரளா பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் வந்து நேரடியாகவும் ஒலிபரப்பு செய்தனர். அதைக்கண்டு தான் மத்திய அரசு அரண்டுபோய் இன்று நடைபெற இருந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழுகூட்டத்தையே ஒத்தி வைத்து இருக்கிறது. அதைக்கண்டு தென் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்” என்றார்.

சார்ந்த செய்திகள்