
மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான 9வது சுற்று ஏலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக ஆழ்கடல் பகுதியை உள்ளடக்கிய 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தமாக 28 வட்டாரங்களில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 596 சதுர கிலோமீட்டர் ஏலம் விடுவதற்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த ஏலத்தில் தமிழகத்தின் தென் முனையில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் 3 மற்றும் சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் 1 ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளம் கடுமையாகப் பாதிக்கப்படும் என இத்திடத்திற்கு அரசியல் கட்சியினர், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் கடந்த வாரம் இந்த ஏலம் இறுதி செய்யப்பட்டு தமிழகத்தின் 4 இடங்களிலும் ஆழ்கடலில் எண்ணெய் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய எரிசக்தி இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.