
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வாணி ஜெயராமின் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது நிலை தடுமாறி விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டது. தலையில் ஏற்பட்ட அடி காரணமே வாணி ஜெயராம் உயிரிழப்பிற்கு காரணம் என பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெற்றியில் இருந்த காயம் மற்றும் மேசையின் மீது இருந்த ரத்தக்கறை ஆகியவற்றை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபரும் வரவில்லை என ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. தடயவியல் அறிக்கை பிரேதப் பரிசோதனை ஆய்வின் முதல்கட்ட அறிக்கை, வீட்டின் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.