
தேர்தலின் போது, இலவசங்களை அறிவிக்கக் கட்சிகளுக்கு தடைகோரி பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாய் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக்கோரி தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "பல்வேறு தரப்பு மக்களைக் கொண்ட நாட்டில் ஒவ்வொரு பகுதிக்குமான தேவை வெவ்வேறாக உள்ளது. ஒரே திட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல் செய்துள்ளது. இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளது என்றும் திமுக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.