திருவாரூர், நன்னிலம் அருகே கார் ஒன்று விபத்துக்குள்ளாகி ஓடையில் விழுந்த சம்பவத்தில் காரில் பயணித்த அனைவரும் சிறு காயத்துடன் மீட்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ளது திருவாஞ்சியம் வாஞ்சிநாதன் கோவில். இந்தக் கோவிலில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தனுக்கென தனி சன்னதி உள்ளது. இதனால் இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த அழகரசன்-பூவிழி தம்பதியினர், தாய் ரேவதி, உறவினர் இளமதி, குழந்தைகள் இருவர் எனப் பலரும் குடும்பத்துடன் இந்தக் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
கோவிலுக்குச் சென்று நன்னிலம் வழியாக நாகை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் சிறு காயத்துடன் உயிர்தப்பினர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.