Skip to main content

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் அரசு பேருந்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Car and government bus collided head-on

 

உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்சும் ஒரு காரும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த எபினேசன், இமான், யுவான், ரபேக்கா ஆகியோர் ஆவர். அவரது தாய் மகன் உட்பட 6 பேர் தாம்பரத்தில் இருந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலைப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.

 

இதில் அரசு பேருந்தின் கீழ் பகுதியில் கார் சிக்கிக்கொண்டது. இதையடுத்து சிறிது தூரம் சாலையில் காரை  இழுத்துச் சென்ற அரசு பேருந்து அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் விபத்து நடந்ததை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளனர். பஸ்சில் சுமார் முப்பத்தி மூணு பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்சை சேலம் மாவட்டம் ஊனத்தூரைச் சேர்ந்த அழகுராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் லேசான காயமடைந்த பஸ் பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து இரவு 8 மணி அளவில்  நடந்ததால் சேலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

dsfds

 

தியாகதுருகம் புறவழிச்சாலை பகுதியில் விபத்து நடந்துள்ள தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் தரப்பில் கூறும்போது, “கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் புறவழிச் சாலையை கடக்கும் போது இரு பகுதிகளிலும் இருந்தும் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை நின்று கவனித்து பார்த்து விட்டு சாலையைக் கடந்து செல்ல வேண்டும். ஆனால் பல வாகன ஓட்டிகள் இருபுறமும் வாகனம் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக வாகனத்தை செலுத்துவதால் இது போன்று விபத்துகள் நேர்கின்றன என்று கூறுகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஆகிய புறவழிச்சாலை பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இருவழி சாலையாக குறுக்கி அமைத்துள்ளதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். தொடரும் விபத்துக்களையும் அதன்மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுப்பதற்கு காவல்துறையும் நெடுஞ்சாலைத்துறையில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.