![Can a rally be conducted with the help of auxiliary army?'-High Court Branch opinion](http://image.nakkheeran.in/cdn/farfuture/evtpGExzFsTLlUN3IzT1xv8efkMA_N6u_OIZk0IKnQ0/1699009302/sites/default/files/inline-images/a2129.jpg)
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை துணை ராணுவத்தின் உதவியோடு நடத்தலாமா? என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் திருவிழா தேரோட்டம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில அரசால் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை ராணுவத்தின் உதவியுடன் தேரை நான் ஓட வைக்கவா? என கேள்வி எழுப்பியதோடு, பல கோடி ரூபாய் செலவில் தேரை செய்தது தெருவில் நிறுத்தி வைக்கவா? என கடுமையாக கேள்வி எழுப்பினார். வரும் 17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
![Can a rally be conducted with the help of auxiliary army?'-High Court Branch opinion](http://image.nakkheeran.in/cdn/farfuture/F0_5PqxfcrfkHQJm9dDKVuiH_cWYK3AmpMU7hBcNgmM/1699009329/sites/default/files/inline-images/020_12.jpg)
வழக்கின் பின்னணியை பார்க்கையில், சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியைச் சேர்ந்த மகா சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற கண்டதேவி கோவிலில் ஆனி மாதத்தில் நடக்கக்கூடிய திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் தற்போது கோவிலுக்கு புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தேரோட்டம் நடைபெறாமல் இருக்கிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதிபதிகள் தேரோட்டம் நடத்த உத்தரவிட்டனர்.
இன்று ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தேர் தயாராக இருக்கிறது. ஆனால் அங்கு பல்வேறு பிரிவினர்கள் இடையே பிரச்சனைகள் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னமும் பிரிவு இருக்கிறது ஒற்றுமை ஏற்படவில்லை இல்லையென்றால் எப்படி? அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.