Skip to main content

நிதி நிறுவன அதிபரின் மகன் கடத்தல்; 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் சிக்கியது

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

 

businessman son incident dharmapuri police investigation team money

 

தர்மபுரி அருகே, நிதி நிறுவன அதிபரின் மகனை கடத்திச்சென்று, ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய மர்ம கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஷியாம் சுந்தர் (வயது 17). குமாரபாளையத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இன்னும் கல்லூரி தொடங்காததால் வீட்டில் இருந்து வருகிறார். செப். 20- ஆம் தேதி, பாலக்கோடு கடை வீதிக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு ஷியாம் சுந்தர் வெளியே சென்றார்.

 

இந்நிலையில் அன்று மாலை சிவக்குமாரை அலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்போம் என மிரட்டி உள்ளார். இதனால் பதற்றமடைந்த சிவக்குமார், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. 10 லட்சம் ரூபாய் தருகிறேன். தயவு செய்து என் மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார். இதற்கு மர்ம நபர் ஒப்புக்கொண்டார். 

 

இதற்கிடையே அவர், பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டனர். டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடத்தல் கும்பலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். சிவக்குமாருக்கு மர்ம நபரிடம் இருந்து வந்த அழைப்பு, எந்த அலைபேசி டவரில் இருந்து வந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு, சம்பவத்தின்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான  காட்சிகளை ஆய்வு செய்தனர். 

 

இதன்மூலம் மிரட்டல் விடுத்த நபர் பற்றிய பின்னணி தெரிய வந்தது. அந்த நபர் சூளகிரி பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், அவரை சுற்றி வளைத்தனர். செப். 21- ஆம் தேதி மர்ம நபருடன் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு ஒரு காரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, காரில் இருந்த சிறுவன் ஷியாம் சுந்தரை பத்திரமாக மீட்டனர். 

 

சிறுவனை கடத்திச் சென்றதாக 7 பேரை பிடித்துச் சென்று, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

 

சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் அளித்த 15 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை காவல்துறையினர் கூண்டோடு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார்? பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார்? என்ற முழு விவரமும் இன்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.