Skip to main content

மக்கள் கட்டிய பாலமும் அடித்து சென்றது - மூங்கில் கட்டி கடக்கும் அவலம்!

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

விருத்தாசலம் அருகே ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் கட்டிய தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மூங்கில் பாலம் அமைத்து கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள தே.பவழங்குடி - ஓட்டிமேடு கிராமத்திற்கும் இடையே மணிமுக்தாறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து தான்,  பள்ளி மாணவர்கள் ஓட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஓட்டிமேடு, பெருந்துறை, கோட்டிமுளை உள்ளிட்ட கிராமங்களில் விளையும் விவசாய விளை பொருட்களை இந்த ஆற்றைக் கடந்து சென்று தான்,  ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, விவசாயிகள் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றைக் கடக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அரசிடம்   பாலம் அமைக்கக்கோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், பாலம் கட்டித்தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வராததால் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இரண்டு லட்சம் செலவில்,  ஓட்டிமேடு - பவழங்குடி கிராமங்களுக்கு இடையே உள்ள மணிமுக்தாற்றில் தரைப்பாலம் அமைத்தனர். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள் கட்டிய தரைப்பாலம் வெள்ளத்தில்,  அடித்துச் செல்லப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 

இதனால் கிராம மக்கள்,  பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் செல்வதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து மூங்கில் பாலம் அமைத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக இரு கிராமங்கள் இடையே பாலம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.