Skip to main content

“ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை”- செக்யூரிட்டி தடுத்ததால் டவரில் ஏறிய வாலிபர்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

 The boy who climbed the tower because the security blocked


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது அற்பிசம்பாளையம் முத்தியால் பேட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி புனிதா(31). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. புனிதாவிற்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் புனிதாவின் கணவர் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியுடன் தமது குழந்தையைக் காண்பதற்காக நேற்று காலை 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.

 

அங்கிருந்த செவிலியர்களிடம் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது எங்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறி படியே பிரசவ வார்டு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்குப் பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டி ஒருவர் பெண்கள் பிரசவ வார்டு பகுதிக்குள் பெண்களை மட்டுமே அனுமதிக்க முடியும் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறி லட்சுமணனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்  லட்சுமணனுக்கும் செக்யூரிட்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமுற்ற லட்சுமணன் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க உள்ளே சென்ற தம்மை உள்ளே விடாமல் தடுத்ததைப் பொறுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்திலிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் விரைந்து வந்து செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்த லட்சுமணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கி அழைத்துச் சென்று அவரது மனைவி குழந்தையைப் பார்க்க அனுமதித்தனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.