Skip to main content

கடலூர் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து! 4 பேர் பலி! 20 பேர் படுகாயம்! 

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Boiler accident at private factory in Cuddalore, 4 passes away 20 injured!

 

கடலூர் - சிதம்பரம் சாலையில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் 50% தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

 

சிப்காட் வளாகத்தில் குடிகாடு அருகே ‘கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட்’ என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிஃப்ட் அடிப்படையில் இந்த ஆலைக்குத் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். 

 

இந்நிலையில், இன்று (13.05.2021) காலை இந்த ஆலையின் இரண்டாவது தளத்தில் தொழிற்சாலையின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் பாய்லரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று பரவிய தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. அங்கிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

 

இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (42), செம்மங்குப்பம் கருணாகரன் மகன் கணபதி (25), காரைக்காடு செந்தில்குமார் மனைவி சவீதா (35), 25 வயதுடைய பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 4 பேர் தீக்காயங்களாலும், மூச்சுத் திணறலாலும் உயிரிழந்தனர்.

 

மேலும், ஆபத்தான நிலையில் படுகாயம், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 20 பேர் மீட்கப்பட்டு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காலை பணியில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்ற சென்ற சிலருக்கும் அங்கிருந்த ரசாயன தெளிப்பின் காரணமாக கை, கால்களில் காயம் ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். உடனடியாக தொழிற்சாலையை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பதற்றம் நிலவியது. மேலும் இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கரும்புகையுடன் ஆலை காட்சியளிக்கும் நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

சிகிச்சை பெற்று வருவோரை அரசு மருத்துவமனையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.