குமரி மாவட்டம் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலில் ஜூன் 11ஆம் தேதி நடந்த தேரோட்டத்தின்போது இந்து மதம் நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடத்தைப் பிடித்து இழுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும் அவர் தேரின் வடம் பிடித்து இழுத்தார். அதேபோல் ஜூன் 14-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை தொடக்க விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொள்வதற்கும் பாஜகவினர் எதிர்ப்பு காட்டியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் கலந்து கொள்ளாமல் அவருக்கு பதில் இந்து மதத்தை சேர்ந்த நாகர்கோவில் மேயர் மகேஷ் அதில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில்தான் தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வருகிற 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜின் பெயர் இடம் பெற்றிருந்ததால் பாஜகவினருக்கு அது உஷ்ணத்தை ஏற்றியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன், இந்துக்கள் அல்லாதவர்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு தான் பங்கேற்க வேண்டும். அரசு விழாவாக நடைபெறும் போது இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளும் போது சம்பிரதாயங்கள் கடைபிடிக்காமல் கோவிலின் புனிதம் கெட வாய்ப்புள்ளது. எனவே இந்துக்கள் அல்லாதவரை நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்து நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கும்பாபிஷேகம் விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும்போது அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினையை வழிவகுக்கும்.
எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை பரந்த மனபான்மையில் அணுக வேண்டும் என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இது பாஜகவினருக்கு பலத்த எதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மனோ தங்கராஜ் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு போலி ஆன்மீகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு கிடைத்த செருப்படி என்றிருக்கிறார்.