Skip to main content

“வருமான வரித்துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது - முத்தரசன் 

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

BJP is using Income Tax as a political tool says Mutharasan

 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் நடைபெற்ற சோதனை இரவு நிறைவடைந்தது. இதில் சில இடங்களில் வருமான வருத்துறையினருக்கும் வாக்குவாதங்களும் தகராறுகள் நடைபெற்றனது. 

 

இந்த நிலையில் வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வருமான வரித்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் மீதும் வரும் புகார்களை சட்ட விதிமுறைகளின் படி விசாரிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டில் முதலீடுகள் திரட்டுவதற்கான அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் அவரது அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு  ஏற்படுத்தியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. 

 

குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை இணைந்தது தான் நாடாளுமன்றம் என அரசியல் அமைப்பு சட்டம் தெளிவுபட வரையறுத்துள்ளது. ஆனால் குடியரசுத் தலைவரை நிராகரித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்க முடியாத நிர்பந்தத்தை பாஜக ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக சமூக நீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முனைப்பாக செயல்படும் திமுகவை அச்சுறுத்த வருமான வரித்துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்