
தமிழ்நாடு பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என். விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் அறிவாலயத்தில் தமிழ்நாடு பாஜக பட்டியலின பிரிவு பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி நேற்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ் - மதுரைவீரன், மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இது தொடர்பாக என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிரமாக களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, கழகத் தலைவர் அவர்கள் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசிகவில் பொறுப்புகளை வகித்து வந்த என். விநாயகமூர்த்தி ஈரோடு மாமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விசிகவிலிருந்து விலகிய என்.விநாயகமூர்த்தி பாஜகவில் சேர்ந்த நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.