தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு மற்றும் பயன்படுத்தாத கிணறுகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிடவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![bjp recommends to close borewells](http://image.nakkheeran.in/cdn/farfuture/LUOCRQuiieWAHCRJKW8BAWhz8lqVEB73d_EcON-BHTU/1572331395/sites/default/files/inline-images/bjp%20in.jpg)
இதுகுறித்து அதில் "திருச்சி மணப்பாறை பகுதியில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் மூடப்படாத ஆழ்துளை குழாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டான். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க அரசு கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு 24 மணிநேரத்தில் தங்கள் பகுதியில் கைவிடப்பட்ட ஆழ்துளை மற்றும் பயன்படுத்த படாத கிணறுகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கவேண்டும். சில மாவட்ட ஆட்சியர்கள் பொதுவான உத்தரவுகளை வெளியிடுவதன் மூலம் பயனில்லை.
மேலை நாடுகளில் வீட்டு தண்ணீர் பெற பயன்படும் குழாய்களை பூமிக்கு அடியில் தோண்ட அரசிடம் அனுமதி வாங்கவேண்டும். தற்போது நமது மாநில நிர்வாக நடைமுறைப்படி இதை கிராம நிர்வாக அதிகாரிதான் எளிதில் கண்காணிக்க முடியும். ஆகையால் அரசு உடனடியாக திறந்துள்ள ஆழ்துளை கிணறுகளை மூட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உத்திரவேண்டும். மேலும் உலக நாடுகளிடம் இது போன்ற சம்பவங்களில் சமாளிக்க தொழில்நுட்ப உபகரணங்களை பெற வேண்டும்" என பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டு கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.