Skip to main content

''பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத ஒரு மிஸ்டு கால் பார்ட்டி அது''-செந்தில் பாலாஜி விமர்சனம்

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

nn

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஒரு பெரும் பட்டாளமே ஈரோட்டில் இறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டுகால சாதனையால் கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது ஒரு மாயை. அது தவறான கருத்து. இந்த கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை.  அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 

ஈரோடு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதும்  தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை பொறுத்திருந்து பாருங்கள்." என்றார்.

 

பா.ஜ.க. அண்ணாமலை குறித்த கேள்விக்கு, "அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் பார்ட்டி.  பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதைப் போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர். மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.  ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொறுத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.  

 

விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010ல் இருந்த மின் கட்டணத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்.  தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி அமையும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்