உளுந்தூர்பேட்டையில் தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக பதிவான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவின் மாநிலப் பொதுச்செயலாளருமான சூர்யாவை திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது தி.மு.க. அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டதைத் தமிழக பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.