
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் பட்டாபிராமன்(45). இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் பாண்டிச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்களைக் கடத்தி வந்து வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கிள்ளை காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி மது பாட்டில்கள் 6 ஐ காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்று பல ஆயிரம் மது பாட்டில்களைச் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையொட்டி இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.