Skip to main content

பாலியல் குற்றச்சாட்டு... பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் நீக்கம்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Bishop Heber College Professor fired!

 

அண்மையில் ஆசிரியர்களால் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவது தொடர்பான புகார்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்துவரும் நிலையில், அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்குப் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் கூறிய நிலையில் அவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாலியல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில், பாலியல் புகாரில் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த சில மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.