Skip to main content

“செலவுக்கு காசு இல்ல... துணிவு படம் ஐடியா கொடுத்துச்சு...” - வங்கிக் கொள்ளையில் சிக்கிய இளைஞர்! 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

Bank theft issue in Dindigul police arrested one youngster

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று காலை நடந்த பயங்கர கொள்ளைச் சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை பதற்றமடைய வைத்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை வங்கிப் பணியாளர்கள் 10 மணி அளவில் வங்கிக்கு வந்து தங்கள் பணிகளைத் துவங்கியுள்ளனர். இரண்டு பெண் பணியாளர்கள், வங்கி மேலாளர் உட்பட நான்கு பேர் வங்கிக்குள் இருந்த நிலையில், வாடிக்கையாளர்போல் வங்கிக்குள் நுழைந்த ஒரு இளைஞர், வங்கி பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை கேட்டுள்ளார்.

 

அதற்கு அங்கிருந்த ஒரு பணியாளர் வாடிக்கையாளர் போல் வந்த அந்த இளைஞரின் சந்தேகங்களை விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரம் அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த ஒரு வகையான ஸ்ப்ரேவை அங்கிருந்த பணியாளர் முகத்தின் மீது அடித்துள்ளார். அதில் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கத்தியுள்ளார். இதனைக் கண்டு அருகிலிருந்த இரண்டு பணியாளர்களும் நெருங்கி வர அவர்கள் மீதும், அந்த இளைஞர் ஸ்ப்ரே அடித்துள்ளார்.

 

அவர்கள் மூவரும் அந்த ஸ்ப்ரேவில் நிலைகுலைந்து இருக்க, ஏற்கனவே தயாராக வந்திருந்த அந்த இளைஞர் தான் வைத்திருந்த டேப் மூலம் வங்கி ஊழியர்களின் கைகளைக் கட்டினார். இதில், வங்கியின் உள்ளே இருந்த ஒரு பணியாளர் வெளியே நடந்த சம்பவத்தினை அறிந்து சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரிடம் மாட்டாமல் வங்கிக்கு வெளியே வந்து ‘கொள்ளையன்... கொள்ளையன்... பேங்க்ல கொள்ளையடிக்கிறான்...’ எனக் கத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக வங்கிக்குள் சென்று அந்தக் கொள்ளையனை மடக்கிப் பிடித்து அவரின் கைகளைக் கட்டியுள்ளனர்.

 

பிறகு வங்கி ஊழியர்கள், திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த கலில் ரகுமான் (23) என்பதும் இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

 

மேற்கொண்டு நடத்திய தொடர் விசாரணையில் அந்த இளைஞர், ‘கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு போகாமல் இருக்கிறேன். செலவுக்கு வீட்டில் தான் பணம் வாங்கி வருகிறேன். தற்போது வீட்டிலும் பணம் கொடுப்பதில்லை. அந்த விரக்தியில் இருந்தபோது, தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தை பார்த்தேன். அதில், வங்கியில் கொள்ளையடிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும் சில படங்களை பார்த்தேன். அதன்பிறகு வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்து ஸ்ப்ரே, ஊழியர்களை கட்டிப் போட டேப், அவர்களைத் தாக்க கம்பி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தேன்’ என்று தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கலில் ரகுமானிடமிருந்து காவல்துறையினர், அவர் உபயோகப்படுத்திய ஸ்ப்ரே, கையில் வைத்திருந்த கம்பி, டேப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.