Skip to main content

வங்கதேச பெண் கொலை; 9 மாதத்திற்கு பின் கணவரிடம் சடலம் ஒப்படைப்பு! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Bangladesh women incident police investigation in salem district

 

சேலத்தில் கொலை செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக காவல்துறை பராமரிப்பில் இருந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மசாஜ் சென்டர் பெண்ணின் சடலம், இந்தியா வந்திருந்த கணவரிடம் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) ஒப்படைக்கப்பட்டது. 

 

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 29). சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் தேஜாஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். சந்தேகத்தின்பேரில் இந்த மையத்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

 

இதுகுறித்த விசாரணை ஒருபுறம் நடந்து வந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி, திடீரென்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். 

 

சேலம் குமாரசாமிப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் நடேசனுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல் வாடகைக்கு வசித்து வந்தார். அந்த வீட்டில் உள் அலமாரியில் பெரிய சூட்கேஸூக்குள் அவருடைய சடலத்தை அடைத்து வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். 

 

தேஜ் மண்டல் தன்னுடைய மசாஜ் மையத்தில் சொந்த நாட்டைச் சேர்ந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களையும், லப்லூ என்ற ஆண் ஊழியரையும் பணிக்கு அமர்த்தி இருந்தார். அவர்களை, தான் வசித்து வரும் அதே குடியிருப்பில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

காவல்துறை விசாரணையில் அவரிடம் வேலை செய்து வந்த நான்கு பேரும் சேர்ந்துதான், தேஜ்மண்டலை பணத்துக்காக கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. 

 

இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் சேலம் மாநகர காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதற்கிடையே, தேஜ்மண்டலின் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கதேசத்தில் வசித்து வரும் அவருடைய கணவர் முகமது ராக்கிக்கு காவல்துறையினர் இந்திய தூதரகம் மூலமாக தகவல் அளித்தனர். 

 

ஆனால் இந்தியா வந்து செல்லும் அளவுக்கு வசதி இல்லாததால் உடனடியாக வர முடியாது என்று அவரும் கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். இதனால், கடந்த 9 மாதத்திற்கும் மேலாக தேஜ்மண்டலின் சடலம் காவல்துறை கண்காணிப்பில், சேலம் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, முகமது ராக்கி இந்தியா வந்து செல்வதற்கான விமான போக்குவரத்து செலவு, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுக்கான செலவுத்தொகையை காவல்துறையினர் அவருக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதையடுத்து முகமது ராக்கி, ஜூலை 31- ஆம் தேதி சேலம் வந்து சேர்ந்தார். அவரிடம், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ், எஸ்.ஐ. அருண்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

விசாரணையில், ''தனது மனைவி அழகுக்கலை தொழில் செய்வதற்காக சொந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியா வந்துவிட்டார். அவருடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காததால் அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்றபோதுதான், தேஜ்மண்டல் பாலியல் தொழில் செய்து வந்திருப்பதே தெரிய வந்தது,'' என்று முகமது ராக்கி கூறியுள்ளார். 

 

அரசு மருத்துவமனை சடவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த தேஜ்மண்டலின் சடலத்தை முகமது ராக்கி அடையாளம் காட்டினார். இறந்தவர் ஒரு மாற்றுத்திறனாளி. அதை வைத்து தனது மனைவியின் சடலத்தை அடையாளம் காட்டினார். 

 

இந்நிலையில், மசாஜ் மையங்கள் நடத்தி வந்த கட்டடங்களுக்கும், குடியிருந்த வீட்டிற்கும் தேஜ்மண்டல் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுத் தருமாறு முகமது ராக்கி கேட்டிருந்தார். அத்தொகையை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

 

சேலத்திலேயே தேஜ்மண்டலின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ரிஷி, நிஷி, ஷீலா, லப்லூ ஆகியோரின் படங்களைக் காண்பித்து விசாரித்தபோது, அவர்களில் இருவர் வங்கதேசத்தில் தேஜ்மண்டலின் வீட்டில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வந்தது. கொலையாளிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.