Skip to main content

சில்லறைக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய 'பலே' திருடன் கைது! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

 

'Bale' thief arrested for swindling tens of thousands of rupees in retail

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள கடைகளில், கடந்த ஒரு மாத காலமாக, "கோயிலில் உண்டியல் காசு எண்ணப்படுகிறது, சில்லறை வேண்டுமா?" என கடை உரிமையாளர்களிடம் கேட்டு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

 

இதுகுறித்து விருத்தாச்சலம் கடைவீதியில் உள்ள துணிக்கடையில், சில்லறை வேண்டுமா? என்று கேட்டு, கடை உரிமையாளரிடம் பேசும் நபரின் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி, கடை உரிமையாளர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று (24/06/2022) சில்லறை திருடன், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் உள்ள, தனியார் உணவகத்திற்கு வந்து, வழக்கம் போல், கோவில் உண்டியலில் காசு எண்ணுவதாக கூறி, சில்லரை வேண்டுமா? எனக் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். 

 

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர், சம்பந்தப்பட்ட நபரை விசாரித்தபோது, கடை கடையாக சென்று சில்லறைத் தருவது போல் பணத்தை 'அபேஸ்' செய்து செல்லும் நபர் எனத் தெரிய வந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். 

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட விருத்தாசலம் காவல்துறையினர் முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட சில்லறை திருடன் நாகப்பட்டினம் மாவட்டம், மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் சக்திவேல் என்பதும், தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு ஊர்களுக்கு சென்று, சில்லறை வேண்டுமா என்று கேட்பதுபோல் பல்லாயிரம் ரூபாய் நூதன முறையில் ஏமாற்றியது தெரிய வந்தது. அதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

திமுக பிரமுகர் மீது  துப்பாக்கிச் சூடு; ஓ.பி.எஸ் அணி பொறுப்பாளர் உட்பட 6 பேர் கைது! 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

6 people arrested in Virudhachalam DMK member case
இளையராஜா

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.  

 

இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர்  இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

 

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார். 

 

6 people arrested in Virudhachalam DMK member case
புகழேந்தி மற்றும் ஆடலரசு

 

இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்

 

விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல்  செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.