Skip to main content

குட்டி யானை மரணம்; கதறிய யானைக் கூட்டம்!  

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

Baby elephant passed away

 

தென்காசி மாவட்டம் புளியரைப் பகுதியின் தமிழக - கேரள எல்லையான அச்சன்கோவில் மலைப் பகுதி கேரளாவைச் சேர்ந்தது. அங்கிருந்து வனத்தின் ஊடே புனலூர் செல்கிற அமலிமுக்கு சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் களரி வளையம் அருகே ஒன்றரை வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் மண்ணப்பாறை வனத்துறை சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

 

வனச்சரக அலுவலர் அனில் குமார் தலையிலான வனக்காவலர்கள் சம்பவ இடம் வந்தபோது, இறந்து கிடந்த குட்டி யானையைச் சுற்றி யானைக் கூட்டம் நின்று கொண்டு யாரும் அருகில் செல்ல முடியாதபடி முற்றுகையிட்டிருந்தன. யானைக் கூட்டத்தைக் கலைக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னர் இறந்த குட்டி யானையை சுற்றி நின்ற யானைக் கூட்டம் கலைந்து சென்றன. ஆனால் தாய் யானை மட்டும் தன் குட்டியை விட்டு நகராமல் கண்ணீருடன் தலையை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.

 

Baby elephant passed away

 

வெகு நேரப் போராட்டத்திற்குப் பிறகு காத்திருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டினர். ஆனாலும் தாய் யானை சிறிது தூரம் ஓடிச் சென்று பின் அங்கிருந்தபடியே குட்டியைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டே நின்றிருந்தது. தாய் யானையை அருகே வர விடாமல் வனத்துறையினர் கண்காணித்துக் கொண்டிருக்க சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை உதவி அலுவலர் சியாம் சந்திரனின் தலைமையிலான வனக் காவலர்கள் குட்டி யானையின் உடலை பிரேதப் பரிசோதனை நடத்தினர். இதன்மூலம் குட்டி யானை உட்கொண்ட உணவு ஜீரணிக்க முடியாமல் வயிற்றுப் போக்கு மற்றும் மாரடைப்பு காரணமாக குட்டி யானை இறந்திருப்பது தெரியவந்தது.

 

இறந்த குட்டி யானையால் வனப் பகுதியின் மற்ற யானைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சம்பவ இடத்திலேயே குட்டி யானையின் உடல் தீ வைத்து எரியூட்டப்பட்டது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தாய் யானை தன் குட்டிக்கு கண்ணீருடன் விடை கொடுத்த உணர்ச்சியான சம்பவம் வனத்துறையினரையும் உருக வைத்துவிட்டது. ஐந்தறிவு வனவிலங்கு என்றாலும் ரத்த பாசம் என்று வருகிற போது இயல்பாகவே கண் கலங்குகிற மனிதாபிமானமும் வந்து விடுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.