![Attention Electric Train Passengers Southern Railway Important Notice](http://image.nakkheeran.in/cdn/farfuture/fOMSIYSW-9bLki1ACA_YECo4QsBkt8OOu9B0ltwow4k/1708686269/sites/default/files/inline-images/memu-beach-art_1.jpg)
சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி தொடர்ந்து 3 வது வாரமாக நாளை மறுநாளான (25.02.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரத்திற்கு 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மறுநாள் பயணிகள் தேவைக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளையும் கூடுதலாக இயக்கவும் தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.