Skip to main content

சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6- ஆம் தேதி அரியர் தேர்வு நடத்தப்படும்!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

arrear exams chennai high court tn govt

சட்டப் படிப்புகளுக்கு, ஜனவரி 6- ஆம் தேதி முதல், பருவத் தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படவுள்ளதாக, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடக் கோரி, சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜனவரி 6- ஆம் தேதி முதல், பருவத்தேர்வுகளோடு சேர்த்து அரிய தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். 

 

அப்போது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பல்கலைக்கழகம் வெளியிட்ட அட்டவணைப்படி தேர்வுகளை நடத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்