Skip to main content

பிச்சாவரம் சுற்றுலா மையத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

Arrangements for opening Pichavaram Tourism Center are in full swing!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்து சதுப்பு நிலக்காடு சுரபுன்னை மரங்களின் அழகை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இது இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது முறையாக பிச்சாவரம் சுற்றுலா மையம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதத்திற்கு மேலாகப் பூட்டியிருந்த சுற்றுலா மையம் கரோனா கால தளர்வுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 23- ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா மையத்தைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டும் படகு ஓட்டுநர்கள் கரோனா காலத்தில் நிவாரணம் வழங்கவில்லை; படகு ஓட்டுவதற்கு கூடுதல் கமிஷன் வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிகைகளை வலியுறுத்தி படகு ஓட்ட மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நிவாரணம் வழங்கினால் மட்டுமே படகை ஓட்டுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை (23/08/2021) படகு சவாரி செய்ய முடியுமா? முடியாதா? என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

 

இது குறித்து பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷிடம் கேட்டபோது, "புதிய ஆட்சி அமைந்த பிறகு அவர்கள் நிவாரணம் கேட்டு கடிதம் கொடுக்கவில்லை. ஏற்கனவே, அவர்களுக்கு கரோனா கால நிவாரணமாக ரூபாய் 7,000 வரை வழங்கப்பட்டுள்ளது. கடிதம் கொடுக்காமல் அவர்கள் திடீரென சுற்றுலா மையம் ஆகஸ்ட் 23- ஆம் தேதி திறப்பதை அறிந்து ஆகஸ்ட் 22- ஆம் தேதி காலை கூறுகிறார்கள். இதுகுறித்து மேல் அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைபடி சுற்றுலா மையம் செயல்படும்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்