Skip to main content

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

ariyalur school student incident case high court madurai bench

 

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. 

 

அரியலூர் பள்ளி மாணவி மதமாற்ற வற்புறுத்தலால் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, "மாணவி பேசிய வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதே தற்போது முக்கியம். எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது, யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வீடியோ பதிவு செய்த முத்துவேல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. உண்மையின் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த நாளிலேயே வெளியிட்டிருக்கலாம்" என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. 

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "செல்போனை ஒப்படைத்தப் பின் வெளியான புதிய வீடியோ விசாரணையைத் திசைத் திருப்பியுள்ளது. மாணவியை மதமாற்றக் கட்டாயப்படுத்தப்படவில்லை என தஞ்சை மாவட்ட காவல்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதால், காவல்துறை விசாரணை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது" என்று வாதிட்டார். 

 

இதனிடையே, மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு அறிக்கையாக சில விவரங்களை தாக்கல் செய்திருப்பதாக இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தூய இருதய அன்னை சபை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், மாணவியை, அவரது சித்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளார். ஆனால், அரசியல் காரணத்திற்காகவே எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்று குறிப்பிட்டார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.