அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கூடத்தில் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மது வாங்க தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு மதுக் கடையின் விற்பனையாளர் சுப்பிரமணியன் விற்பனையை முடித்துவிட்டு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 11 ஆம் தேதி மதுக்கடை வழியாகச் சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் ஒரு பக்கம் திறந்த நிலையில் இருந்துள்ளதைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக விற்பனையாளர் சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்தனர். அவர் விரைந்து வந்து கடையைப் பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் ஓட்டைப் போட்டு ஷட்டரைத் திறந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக விற்பனையாளர் சுப்பிரமணியன் இரும்புலிகுறிச்சி போலீசாருக்குத் தகவல் அளித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வேல்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் டாஸ்மாக் கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விற்பனையாளர் சுப்பிரமணியன் தெரிவிக்கையில், "கடையில் வசூலான 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடையில் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றேன். அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததோடு சுமார் 20 மதுபான பாட்டில்களும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக" தெரிவித்தார்.
இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் கொள்ளை நடத்தியவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.