Skip to main content

மீன் பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்படுகிறதா?  கடலில் சென்று ஆய்வுசெய்த கலெக்டர்! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Are fishing regulations being violated? Collector who went to sea and inspected

 

கடலின் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி 5 நாட்டிக்கல் பகுதிக்குள் விசைப்படகை மீன்பிடிக்க பயன்படுத்துவது, இழுவலையின் மடிப்பகுதியில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட இழுவலைகளைப் பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் விதமாக மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு, இயந்திரமயமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரை திறன் ஆகியன குறித்து ஆய்வுசெய்து விதிமுறை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.பி, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர்கள் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு வந்து புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

 

Are fishing regulations being violated? Collector who went to sea and inspected

 

எனவே கடலூரில் சுருக்குமடி வலை பிரச்சனை மற்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி இழுவலை தடை உள்ளிட்ட பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுடன் கடலூர் மீன்பிடி துறைமுகம் சென்று அங்கு சுருக்குமடி வலை பயன்படுத்தப்படுகிறதா? இழுவை விசைப்படகு இயந்திரத்தின் அடிப்பகுதி கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் படகில் கடலுக்குச் சென்றார். கடலில் 5 நாட்டிக்கல் மைல் அளவுக்குப் பயணம் செய்த அதிகாரிகள், கடலில் மீன்பிடி படகுகளில் விதிமுறைகள் மீறப்படுகிறதா என ஆய்வுசெய்தனர். 

 

மேலும், பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள், மிக தாழ்வான பகுதிகள், வடிகால்கள் மூலமாக மழைநீர் கடலுக்குச் செல்லும் பகுதிகளையும் ஆய்வுசெய்தனர். பரங்கிப்பேட்டை முடசல் ஓடை வரையில் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியருடன் கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்சித்சிங் (வருவாய்), பவன்குமார்ஜி (வளர்ச்சி) கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.