Skip to main content

அரக்கோணம் இரட்டைக் கொலை! - உடல்கள் ஒப்படைப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

arakkonam incident police investigation

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 20), செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). நண்பர்களான அர்ஜூன், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சிலர், நேற்று முன்தினம் (07/04/2021) இரவு பக்கத்துக் கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்சினையைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பெருமாள்ராஜ பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் மது அருந்த வரும்படியும், பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படியும் அழைத்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து அந்த நபர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த இரு தரப்பினருக்கும் மீண்டும் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், இருதரப்பு கோஷ்டிகளும் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரைச் சேர்ந்த அர்ஜூனன், செப்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ஜூனன், சூர்யா இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த 2 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெருமாள் ராஜபேட்டையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே, சோகனூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த நான்கு நாள்களாக உடல்களை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்கள் பகுதி வாயிலாக நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் மனைவிகளுக்கு உரிய அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் உயிரிழந்த சூர்யா, அர்ஜூன் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் 4 லட்சத்து 12,500 முதல் கட்ட நிவாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்கும் வரை மாதம் ரூபாய் 5,000 உதவித்தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்களை (நான்கு நாட்களுக்குப் பின்) குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.